Author: Priya ram
•Wednesday, December 26, 2012

இந்த நெயில் ஆர்ட் சௌம்யா கிட்ட இருந்து  நான்  கத்துகிட்டது.... என்னோட நாத்தனார் பொண்ணுக்கு போட்டு விட்டேன்... எப்படி  இருக்குனு சொல்லுங்க....

தேவையான பொருட்கள் :

தேவையான கலர் நெயில் பாலிஷ்
நெய்ல் கலர் நெயில் பாலிஷ்
நெயில் பாலிஷ் ரிமூவர்
பஞ்சு
மெலிசு ப்ரெஷ்
தேவையான ஆக்ரலிக் கலர்

தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்...



நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நகத்தை சுத்தம் பண்ணனும்..


தேவையான கலர் நெயில் பாலிஷ் இட்டு காய வைக்கவும்....


தேவையான டிசைனை, ப்ரஷ் அடி முனை வைத்து ஆக்ரலிக் கலர் கொண்டு இட்டு காயவைக்கவும்.... ( வேற ஒரு நெயில் பாலிஷ் கொண்டு கூட இந்த டிசைன் வரையலாம் )


 காய்ந்ததும் நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு முறை இட்டுக்கனும்....


நெயில் ஆர்ட் செய்த அழகான கை.... :) இந்த நேரத்தில் என்னை நம்பி , தன்னோட கையை தந்த என்னோட நாத்தனார் பொண்ணு தீப்திக்கு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்....
Author: Priya ram
•Monday, December 17, 2012
இந்த குறிப்பு எனக்கு ரொம்ப புதுசு.... கல்யாணத்துக்கு பிறகு தான் இதை கேள்விப்பட்டேன்.... செய்து பார்க்கும் போது ரொம்ப நல்லா இருந்தது.... உடம்புக்கும் ரொம்ப நல்லது... பித்தத்தை குறைக்கும்.... குறிப்பு என்னனு பார்ப்போமா.... ஆரஞ்சு தோல் பச்சடி....

தேவையான பொருட்கள் :

ஆரஞ்சு தோல் - 2 பழம் தோல்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன் 
வெந்தியம் - 1 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 5
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

வெல்லம் - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

ஆரஞ்சு தோலை பிரித்து தனியாக வைக்கவும்.



ஆரஞ்சு தோலை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி வைக்கணும்.


புளியை கெட்டியாக கரைத்து,புளி தண்ணீர் எடுத்து அதில் உப்பு, வெல்லம் போட்டு கரைத்து வைக்கவும்..
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் போட்டு வறுக்கணும்.கடுகு வெடிக்க விட்டு, வெந்தயம், கருவேப்பிலை  போட்டு வறுத்து, அதில் ஆரஞ்சு தோல் போட்டு வதக்கவும்.


 புளி தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி  போட்டு கொதிக்க வைக்கணும்....


திக்காக ஆகும் வரை கொதிக்க விடவும்....


புளி குழம்புக்கு கொதிக்க வைக்கற மாதிரி கொதிக்க வைக்கணும்..


 திக்காக வந்ததும் இறக்கி விடவும்.


தயிர் சாதத்துக்கு தொட்டுண்டு சாப்பிடலாம்...


இனிப்பு, புளிப்பு, காரம் எல்லா டேஸ்டும் இருக்கும்... எங்க வீட்டில் சாதத்துக்கு கூட போட்டுண்டு, பிசைந்து சாப்பிடுவாங்க.... ரொம்ப நல்லா இருக்கும்..... ரெண்டு வாரம் வைத்து சாப்பிடலாம்.... ட்ரை பண்ணி பாருங்க.....

Author: Priya ram
•Monday, December 03, 2012

மோர் குழம்பு செய்வது ரொம்ப ஈஸி.... எப்பவும் சொல்லற மாதிரி சொல்லி ஆரம்பிக்கறாங்க பிரியா -ன்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியறது.... நிஜமாகவே இது ரொம்ப ஈஸி தான்.... போஸ்ட் முடிவுல நீங்களே சொல்லுவீங்க... (தயவு செய்து சொல்லிடுங்க.... சொல்றவங்களுக்கு ஒரு  கப் மோர் குழம்பு பார்சல்.... )


தேவையான பொருட்கள் :

தயிர் - 1 கப்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி

தாளிக்க :

கருவேப்பிலை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம்  - 1/4 டீஸ்பூன்
எண்ணெய்
மணத்தக்காளி வத்தல் -  2  டேபிள்ஸ்பூன்

அரைக்க :

அரிசி - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3  (இல்லைனா காய்ந்த மிளகாயும் போடலாம் )
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - ஒரு துண்டு (சின்னதாக)
துருவிய தேங்காய் - ஒரு கப்

செய்முறை :

அரைக்க உள்ளவற்றை அரை மணி நேரம் ஊற வைக்கவும்....


ஊற வைத்ததை  கொரகொரப்பாக அரைக்கவும்.... 


அரைத்த விழுதை மோரில் கலந்து, உப்பு, மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் ஏற்றவும்.



நன்றாக கிளறவும்....(இல்லையென்றால் அடி பிடித்துவிடும்)

நுரைத்து கொண்டு வந்ததும் இறக்கி விடவும்...


தனியாக வாணலியில் எண்ணெய் விட்டு  பெருங்காயம், வெந்தயம், மணத்தக்காளி வத்தல் தாளித்து மோர் குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி கிளறவும்....


மோர் குழம்பு ரெடி.... 



கல்சட்டியில் குழம்பு செய்தால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு, எங்க வீடுகளில் கல்சட்டியில்  செய்வோம்... இதில் இன்னும் ஒரு பயனும் இருக்கு.. ஒரு முறை கொஞ்சமாக கொதிக்கும் போதே அடுப்பை அனைத்து விடலாம்... கல்சட்டி சூட்டிலேயே மீதி கொதித்து குழம்பு சுண்டி வந்துவிடும்...
மோர்குழம்பு செய்து பார்த்து விட்டு சொல்லுங்க..

அரைக்க ஊறவைப்பதில், அரிசி கொஞ்சமாக சேர்த்தால் போதும்... கொழம்பு திக்காக வருவதற்கு தான் இதை சேர்க்கறது...

மணத்தக்காளி வத்தல் கூட அதிகமாக சேர்த்தால், கசப்பு தெரியும்...


மணத்தக்காளி வத்தலுக்கு பதில் வெண்டைக்காய், வெள்ளை பூசணிக்காய் இப்படி வேற காய்களும் சேர்த்து செய்யலாம்.

Author: Priya ram
•Friday, October 26, 2012
 நவராத்திரி முடிஞ்சு போச்சு... எங்க வீட்டு நவராத்திரி போடோஸ்.... உங்களுக்காக...

எங்க வீட்டுல 5 படிக்கட்டு பொம்மை வைத்தோம்.... 


முதல் ரெண்டு படிக்கட்டு... மரப்பாச்சி பொம்மை கொலுவில் வைக்கணும்...

ரெண்டாவது, மூன்றாவது  படிக்கட்டு... இதில் தசாவதாரம் இருக்கு...


நான்காவது, ஐந்தாவது படிக்கட்டு...



நான்காவது படிக்கட்டில் இருக்கும் இந்த பொம்மைகள் கொண்டப்பள்ளி பொம்மைகள்... மர பொம்மைகள்...

கல்யாண செட்....


செட்டியார்.... பழம் மற்றும் காய் கடை...


செட்டியார் இரும்பு பாத்திரக்கடை... இதில் குட்டி குட்டி அடுப்பு, தவா, அரிவாள்மனை, வாணலி, முறம் எல்லாம் இருக்கு.


மாக்கல் பொம்மை... இதில் அம்மி, குழவி, உரல், இட்லி தட்டு, விளக்கு எல்லாம் இருக்கு...


கொலு, ரொம்ப வருஷமா எங்க வீடுகளில் வைக்கறது... ஒவ்வொரு வருஷமும் புது பொம்மை எதாவது வாங்குவோம்... கல்யாணம் ஆகி வரும்போது, அம்மா வீட்டில் இருந்து கொஞ்சம் பொம்மை தருவாங்க... இப்படி நிறைய பொம்மை சேர்ந்து விடும்.. இந்த மாக்கல் பொம்மை, இரும்பு பொம்மை,மற்றும் சில பொம்மை எல்லாம் எங்க அம்மா வீட்டில் எனக்கு தந்தது... இது எல்லாம் எங்க பாட்டி காலத்து பொம்மை...

என் கணவருக்கு பார்க் வைப்பது ரொம்ப புடிக்கும்.. இந்த தடவை வைக்க முடியலை... அடுத்த தடவை கண்டிப்பாக வைப்போம்... கொலுவை பார்த்து விட்டு ஒரு பாட்டு பாடிட்டு போங்க.... கேட்கறதுக்கு நான் ரெடி.... பாடறதுக்கு நீங்க ரெடியா ????... :)
   

Author: Priya ram
•Wednesday, October 17, 2012
அம்மா செய்து தந்த சில உணவு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது... ஸ்வீட் பணியாரம் செய்வது பற்றிய குறிப்பை சீக்கிரம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதாக சொல்லி இருந்தேன்.... இந்த பணியாரம் போன வார இறுதியில் தான் செய்தேன்.... இதற்கான செய்முறை ரொம்ப ஈஸி தான்...நீங்களும் முயற்சித்து பாருங்கள்...

தேவையானவை :

கோதுமைமாவு - 1/2 கப்
மைதா மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெல்லம்  - 1/2 கப்
தேங்காய் துருவியது - 1/2  கப்
ஏலக்காய்

செய்முறை :

வெல்லத்தை  கொஞ்சமாக  தண்ணீரில் கரைத்து கல் இல்லாமல் வடிகட்டவும்.
கோதுமைமாவு, மைதா மாவு, அரிசி மாவு ஏலக்காய் எல்லாம் போட்டு வெல்ல தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.



தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்...


 கரைத்த மாவை குழிபணியாரம் கல்லில் விட்டு, எண்ணெய் கொஞ்சம் அதிகம் விட்டு வேக வைத்து....


திருப்பி போட்டு (இதை திருப்புவதற்காக ஒரு கம்பி தந்து இருக்காங்க.... ஆனால் நான் ஸ்பூன் வைத்தே திருப்பி விடுவேன்.... அது தான் எனக்கு ஈஸியாக இருக்கு ) இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்...

ஸ்வீட் பணியாரம் ரெடி.


எனக்கு தமிழ் குடும்பம் மூலமாக 2009 இல் ஒரு நல்ல தோழி கிடைச்சாங்க.... அவங்க கூட இதுவரை பார்க்காமல் பேசிகிட்டே நல்ல தோழிகளான நாங்க.... நேத்து சென்னையில் சந்தித்து கொண்டோம்... உங்க எல்லோருக்கும் அதற்காக தான் இந்த ஸ்வீட் ... எடுத்துக்கோங்க.. இந்த இனிப்பு மாதிரியே நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.... ஒரு தோழியை சந்தித்ததில்.... :)

அந்த தோழி வேற யாரும் இல்லைங்கோ...  நம்ம மகி.... தானுங்கோ...


Related Posts Plugin for WordPress, Blogger...